புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி) உள்பட்ட பகுதிகளில் புதிதாக உணவகங்கள் தொடங்க உள்ள வர்த்தகர்கள், இணைய வழியில் (ஆன்லைன்) சுகாதார வர்த்தக உரிமத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என்டிஎம்சி அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கனாட் பிளேஸ், கான் மார்கெட் உள்பட புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட பகுதிகளில் பல உணவகங்கள் முறையான சுகாதார உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் கிடைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து, அதுபோன்ற உணவகங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முறையான சுகாதார உரிமம் இன்றி சுமார் 400 உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் இயங்குவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உணவங்களை புதிதாகத் தொடங்குவோர் இணைய வழியில் சுகாதார உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 1- ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வருகிறது. புதிதாக உணவகங்களை திறக்க நினைக்கும் வர்த்தகர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது 15 நாள்களுக்குள் சுகாதார உரிமம் வழங்கப்படும் என்றனர்.