மதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணியை மேற்கொள்வதற்கான உரிமம் தமிழகஅரசின் மாநிலத் தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்), வி.சத்யபாமா (திருப்பூர்), செந்தில்நாதன் (சிவகங்கை) ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு மக்களவையில் கலாசாரத் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக திங்கள்கிழமை அளித்துள்ள பதில் விவரம்:
தமிழகத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களைப் பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் பாதுகாப்பில் உள்ள நினைவுச்சின்னங்கள், இடங்களைப் பாதுகாக்க நடப்பு நிதியாண்டுக்காக ரூ.4.50 கோடி சென்னை வட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கீழடியில் அகழாய்வுக்காக இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், கீழடியில் அகழ்வாய்வுப் பணியை மேற்கொள்வதற்கு தமிழகஅரசின் தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் (சென்னை வட்டம்) மூலம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட பழங்காலப் பொருள்கள் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், ஜாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
பத்து ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தரவுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. இலக்குநோக்கிய குழுக்கள், மக்கள்தொகை சார்ந்த மத்திய அரசில் உள்ள ஒருங்கிணைப்பு அமைச்சகங்ளால் நலத் திட்டங்கள், கொள்கைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மக்கள்தொகை அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்மொழிவு ஏதும் இல்லை என்று அந்த பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.