தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிச் செயலர் பிரஷாந்த் குமார் பாண்டா, புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் ஒப்புதலுக்கு பிறகு, பிரஷாந்த் குமார் பாண்டா மார்ச் 19-ம் தேதி முதல் விடுவிக்கப்படுவார் என்று தில்லி அரசின் பணியாளர் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தில்லி அரசில் பணியாற்றி வரும் 9 ஐஏஎஸ் அதிஹகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதில் பிரஷாந்த் குமார் பாண்டாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக கேஜரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயின் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். இந்நிலையில், அவரது தனிச் செயலர் பாண்டா புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், வி.கே. ஜெயினிடம் தில்லி போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தை முதலில் பார்க்கவில்லை என்று போலீஸாரிடம் கூறியிருந்த வி.கே. ஜெயின், பின்னர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதைப் பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
தில்லி அரசில் சுமார் 70 ஐஏஎஸ் அதிகாரிகளும், 450 டானிக்ஸ் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு உள்துறை தனிச் செயலர்கள் இருவரை தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டானிக்ஸ் அதிகாரிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர்.
இதையடுத்து, தில்லி தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்திலும் தில்லி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் தினந்தோறும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே கூடி 5 நிமிடம் மௌன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.