தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தில்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த அருண் கூறுகையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-ஆவது நாளான்று மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அமைதி வழியில் நடைபெற்ற போராட்டத்தை தமிழக அரசு திட்டமிட்டே கலைத்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்; துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்துக்குப் பதில் ரூ.1 கோடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தமிழக அரசை மத்திய அரசு உடனடியாக கலைக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்' என்றார்.