துவாரகாவில் உள்ள வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை திடீரென புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு ரூ. 2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். இதில், காசாளர் உயிரிழந்தார். மூவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
கைரா கிராமத்தில் உள்ள கார்ப்ரேஷன் வங்கியில் கொள்ளை நடந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணிக்கு தொலைபேசியில் புகார் வந்தது.
அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 4 மர்ம நபர்கள் திடீரென வங்கிக்குள் நுழைந்து காசாளரை துப்பாக்கியால் சுட்டு ரூ. 2 லட்சம் கொள்ளையடித்துள்ளனர். தப்பிக்கும்போதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது.
குண்டு காயமடைந்த வங்கி காசாளார் சந்தோஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பணத்தைக் கொள்ளையடித்து கொண்டு 4 கொள்ளையர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர். அவர்களைப் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.