வடகிழக்கு தில்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறையினர் கூறினர். இந்த விபத்தில் எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி தீயணைப்புத் துறையினர் அளித்த கவலின்படி, எஸ்பிஐ வங்கிக் கிளையின் முதல் தளத்தில் தீ பற்றி எரிவதாக காலை 9.15 மணியளவில்
தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
பணம் வைத்திருக்கும் அறை, மேலாளர் அறை, முக்கிய ஆவணங்கள் உள்ள அறை பாதுகாப்பானநிலையில் இருந்தன. எனினும், கட்டட உள்ளமைப்பு, கனிணிகள், மரச்சாமான்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர்.