நொய்டாவில் கர்ப்பிணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கூடுதல் வரதட்சிணை கேட்டு, அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்டாவின் நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. இவரது மனைவி லிஜூ சுக் (30). இவர்களுக்கு கடந்த 2015-இல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு மகள் உள்ள நிலையில், லிஜூ மீண்டும் கர்ப்பமாகி இருந்தார்.
கணவரது வீட்டில் தங்கியிருந்த லிஜூ, கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணவர் வீட்டார் தெரிவித்தனர்.
ஆனால், கூடுதல் வரதட்சிணை கேட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே, லிஜூவை அவரது கணவரும், குடும்பத்தினரும் கொடுமைபடுத்தி வந்தனர். லிஜூ மீண்டும் கர்ப்பமானதைத் தொடர்ந்து, அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
அத்துடன், கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். லிஜூ, உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டதாக சந்தீப்பின் தந்தை எங்களிடம் கூறினார்.
ஆனால், மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக சந்தீப்பின் தாயார் கூறினார். லிஜூவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தீப் சர்மா, அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சிணை தடைச் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் சந்தீப் கைது செய்யப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.