பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் பங்களிப்பைத் தவிர்த்து இந்திய வரலாற்றை எழுத முடியாது என்றும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடுபடுவதாகவும் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தில்லி பாஜகவின் ஓபிசி மோர்ச்சா உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தில்லி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, பொதுச் செயலர்கள் சித்தார்த்தன், குல்ஜீத் சிங் சாகல், கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் பிபின் பிகாரி சிங், ஓபிசி மோர்ச்சா தலைவர் கௌரவ் கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மனோஜ் திவாரி பேசியதாவது: இந்திய வரலாற்றில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்பு முக்கியமானது.
அவர்களின் பங்களிப்பைத் தவிர்த்து இந்திய வரலாற்றை யாராலும் எழுத முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடியை, இந்திய மக்கள் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்து வருகிறார். அவரை மீண்டும் பிரதமராக்க நாம் பாடுபட வேண்டும்.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்றார் அவர்.