அக்ஷர்தாம் மேம்பாலத்தில் சாலைத் தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லியில் உள்ள அக்ஷர்தாம் பகுதி மேம்பாலத்தில் சம்பவத்தன்று கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் சாலையின் மையப் பகுதியில் இருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காருக்குள் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்தில் போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரின் கதவு "கேஸ் கட்டர்' பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். க
காயமடைந்த நால்வரில் முகம்மது ஷமிம் (52) சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்தார். சிகிச்சையின் போது முகம்மது ஷஹாபுதீன் (34) என்பவர் இறந்தார். முகம்மது ஆரிஷ் (34), சதக்கின் (30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் (கிழக்கு) பங்கஜ் சிங் கூறுகையில், "வேகமாக ஓட்டிவரப்பட்டு சாலைத் தடுப்பு மீது கார் மோதி இருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சக்கர்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்றார்.
மற்றொரு விபத்து: வடகிழக்கு தில்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார்சைக்கிள் மீது மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியதில் புபீந்தர் (23) என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் உணவை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சிவம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புபீந்தர் உயிரிழந்தார்.
சிவம் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.