அமெரிக்க பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் குருகிராம் காவல் துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தாம் பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், ஒன்றரை ஆண்டுகளாக தனது மேலதிகாரி பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகவும், பல தருணங்களில் தன்னை கேலி செய்து அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நிறுவனத்தின் பாலியல் விசாரிப்பு குழுவிடம் புகார் அளித்தாகவும், உளவியல் ரீதியான ஆலோசனை பெற்றதாகவும் அப்புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், குருகிராம் செக்டார் 42-இல் வசித்து வரும் அந்த 50 வயது உயர் அதிகாரிக்கு எதிராக குருகிராம் செக்டார் 51 காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜ் பாலா கூறுகையில், "இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம். பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் நிறுவனத்தில் முதுநிலை பதவியில் இருக்கிறார். குற்றம்சாட்டுக்கு உள்ளானவர் அவரது மூத்த அதிகாரி. பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே இது தொடர்பாக நிறுவனத்தின் உள்புகார் விசாரிப்பு குழுவிடம் அளித்து, உளவியல் ஆலோசனையும் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உண்மை குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நிறுவனத்தை அணுகி விசாரணை நடத்த உள்ளோம்' என்றார்.