மாநகராட்சிகளை தில்லி அரசு ஏமாற்றி வருகிறது: மேயர்கள் குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சிகளை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஏமாற்றி வருவதாக மேயர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தில்லி மாநகராட்சிகளை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஏமாற்றி வருவதாக மேயர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயர் பிபின் பிகாரி சிங் குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  தில்லி அரசு சுமார் ரூ.1,200 கோடியை கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். இந்த நிதி வழங்கப்படாததால், மாநகராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், டெங்கு, மலேரியா தடுப்புப் பணிகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில், தில்லி மாநகராட்சி மேயர்கள் தில்லி முதல்வரைச் சந்தித்தபோது மிக விரைவில் நிதி ஒதுக்கப்படும் என கேஜரிவால் உறுதியளித்தார். ஆனால், அந்த நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றார் அவர். 
வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மேயர் ஆதேஷ் குப்தா கூறியதாவது: தில்லி 4-ஆவது நிதிக் குழு பரிந்துரைகளின்படி, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.1,493 கோடி நிலுவையில் உள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக, மாநகராட்சியின் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீர் வடிகால்களைத் தூர் வார முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க நிதி தேவை. நிதி வழங்குவதாக உறுதியளித்த கேஜரிவால் இன்னும் நிதி ஒதுக்கவில்லை. தில்லி மாநகராட்சிகளை தில்லி அரசு ஏமாற்றி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com