அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமாருக்கு குமரி மாவட்ட ஐஎன்டியூசி தோட்டத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் அவரச செயற்குழுக் கூட்டம் திருவட்டாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு ஐஎன்டியூசி தலைவர் சி. அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கப் பொருளர் எம். குருசப்பன், துணைத் தலைவர் எஸ். வாசுதேவன் நாயர், பொதுச் செயலர் அரகநாடு மோகனன், செயலர்கள் கே. பரமேஸ்வரன், மணி, சண்முகராஜ், நேசையன், தங்கச்சன், ரமேஷ், ரவி, டேவிட்சன், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையையடுத்து தொழிலாளர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்ட போது, அனைத்துச் சங்க தொழிலாளர் பிரதிநிதிகளையும் அழைத்து போராட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். தொழிலாளர்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதி அளித்து, அதன்படி செயல்பட்டு 20 சதவீதம் போனஸ் பெற்றுத்தந்த மாநிலங்களவை உறுப்பினர் அ. விஜயகுமாருக்கு பாராட்டும், நன்றி தெரிவித்து கொள்வதெனவும், மேலும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுக் கொடுக்கவும், ரப்பர் கழகத்தில் நிலவும் அவல நிலையைப் போக்கிடவும் மாநிலங்களவை உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரசு ரப்பர் கழகம் மைலாறு கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சங்க பணிகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறும் ரப்பர் கழக அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.