இந்தியாவில் 30 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரவீந்திரன் தெரிவித்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியது: இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 30 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணி அதிக உணர்ச்சி வசப்படுதலாகும். அதை தவிர்க்க வேண்டும். மேலும், உடல் உழைப்பு, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் இருதய நோயை தவிர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அரிசி உணவை குறைத்துக் கொண்டு சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக இருதய நோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது, இதில் மருத்துவக் கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.