ரசாயனக் கலவை பூசுவதற்காக குமரி திருவள்ளுவர் சிலையில் சாரம் அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள இருவேறு பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியன அமைந்துள்ளன. இவற்றை படகுகள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்து வருகின்றனர். பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த படகு போக்குவரத்து நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.
ரசாயனக் கலவை: திருவள்ளுவர் சிலை கடலுக்குள் அமைந்துள்ளதால் உப்புக் காற்றினால் அடிக்கடி சேதம் அடைந்து வருகிறது. இதைத் தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2013ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் ரசாயனக் கலவை பூச திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. விசைப் படகுகள் மூலம் சாரம் அமைப்பதற்கான இரும்பு கம்பிகள் திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
தற்போது சிலையைச் சுற்றிலும் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நடைபெறுவதால் 6 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com