அரசு ரப்பர் கழக அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் மே 12 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
குலசேகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சிஐடியூ தோட்டம் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் தலைமை வகித்தார். தலைவர் பி. நடராஜன், ஜனதா தளம் நிர்வாகிகள் ஞானதாஸ், அசோக்குமார், ஐஎன்டியூசி நிர்வாகிகள் பரமேஸ்வரன், காஸ்டன் கிளிட்டஸ், எல்பிஎப் நிர்வாகிகள் விஜயன், சிவநேசன், பாலசுப்பிரமணியன், பிஎம்எஸ் நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிர்வாக இயக்குநர் பங்கேற்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். கடந்த ஆண்டுக்கான குடை, போர்வை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். மணலோடை கோட்டத்தில் தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே மாதம் 12 ஆம் தேதி வேலை நிறுத்தமும், நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.