மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திச் செல்ல முயன்ற 500 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் அழகியமண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று மார்த்தாண்டம் அருகே பூவன்கோடு பகுதியில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். இதில் காரில் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டாராம்.இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.