வாரமொருமுறை இயக்கப்படும் நாகர்கோவில்-சென்னை அதிவிரைவு ரயிலை நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி இயக்கவேண்டுமென பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக தென்மாவட்ட இரயில் பயணிகள் சங்க கௌரவத் தலைவருமான மனோதங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக அலுவலர் மற்றும் முதன்மை செயல் மேலாளரை சந்தித்து அவர் கொடுத்த மனு: சென்னை மற்றும் வெளியூர்களுக்கு தினசரி செல்லும் தென் தமிழக மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து வருகிறது. இது பொது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது.
இதை தவிர்க்கும் வகையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரமொருமுறை இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு ரயிலை (தடம் எண் 12667, 12688 ) நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் இயக்க தினசரி இயக்க வேண்டும் . அவ்வாறு இயக்கப்பட்டால் பொதுமக்கள் தினசரி சந்தித்துவரும் நெரிசல்கள் குறையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை இதனையும் சீரமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.