ஆசாரிப்பள்ளத்தில் சனிக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த வடக்குகோணம் ஐஎஸ்ஆர்ஓ காலனி சாலையைச் சேர்ந்த யோவான் மனைவி ஜினு (24). இவர், சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் வடக்கு கோணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். சத்துணவு மையம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜினு கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நாகர்கோவில் நகரில் ஆட்சியர் அலுவலகம் அருகில் பகலில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை சேண்டி ஜெரால்டினிடம் பைக்கில் வந்த 2 பேர் 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
இதே போல் திருவட்டாறு செட்டியார்விளையைச் சேர்ந்த மேரி ஸ்டெல்லாவிடம் 7.5 பவுன் தங்கச் சங்கிலியும், மண்டைக்காடு கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த அஜிதா ராணியிடம் 9.5 பவுன் தங்கச் சங்கிலியும், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் எலிட்மேரியிடம் 12 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது பெண்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.