மயிலாடியில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகஸ்தீசுவரம் வட்டம், மயிலாடியில் (பேரூராட்சி பகுதிக்கு மட்டும்) ரிங்கிள் தெளபே மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (ஆக. 16) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், கடந்த ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற முன்னோடி மனுநீதிநாள் முகாமின்போது பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்படும்.
மேலும், இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக அரசு நலத் திட்ட விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, மயிலாடி பேரூராட்சி பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.