சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்தவ மகளிர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் கிளாரிசா வின்சென்ட் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார். பேராசிரியை ஸ்டெபி அறிமுக உரையாற்றினார்.
புதுதில்லி ஏ.ஐ.சி.டி.இ. செயலர் அலோக் பிரகாஷ் மிட்டல், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: பொறியியல் பட்டம் பல கடமைகளை முன்வைத்திருக்கிறது. இப்பட்டமானது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கானது மட்டுமல்ல. மாறாக ஒரு குடும்பம் , சமூகம், நாடு இந்த உலக முனேற்றத்திற்கானது.
சமூக அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் இந்த அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்கிறார்கள். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். பெண்கள் பிறரை சாராமல் சுதந்திரமாக செயல்பட்டு , தலைவர்களாக உருவெடுத்து இந்த உலகையே வழிநடத்தலாம் என்றார் அவர்.
தமிழ்நாடு சுய நிதி பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் முனிரெத்தினம் , பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம்பெற்ற 23 மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார். நாஸ்காம் அமைப்பின் மூத்த அதிகாரி புருஷோத்தமன் பேசினார்.