கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, அதையொட்டிய பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால், ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும், மரம் முறிந்து விழுந்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
சூறைக்காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து விழுந்து வன்னியர் வாற்றுகாலை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரின் வீட்டுக் கூரை சேதமடைந்தது. மேலும் அப்பகுதியிலுள்ள பாய் என்பவரின் வீடும் சேதமடைந்தது.
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த சுகுமாரன், செல்வராஜ், செல்வர்ட், புஸ்பராஜ் ஆகியோர் பயிரிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. அப்பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி என்பவருக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் முறிந்தன.
மெதுகும்மல் ஊராட்சி கோனசேரி பகுதியில் வாழை பயிரிட்டிருந்த களியக்காவிளை பி. டேவி என்பவருக்குச் சொந்தமான 400 -க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சரிந்து சேதமடைந்தன.
மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நின்ற நாவல் மரங்கள் உள்ளிட்ட பல மரங்கள் முறிந்தன. அதங்கோடு, மலையடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான ரப்பர் மரங்கள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சூறைக்காற்று காரணமாக புதன்கிழமை இரவு முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததையடுத்து களியக்காவிளையிலிருந்து நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து வசதியின்றி பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.