குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவருக்குமே தமிழக அரசு எந்தவித பாரபட்சமுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். உயிர் எல்லோருக்கும் பொதுவானது. மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தினமும் குறைந்தது 10 முறைக்கு மேல் தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.
இதே போல் குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர், தென்னை, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் இன்று குமரி மாவட்டத்தில் சில இடங்களில் ஆய்வு செய்து சென்றுள்ளார். உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என்றார் அவர்.