உதவித்தொகை கோரி ஆம்புலன்ஸில் வந்து குமரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி ஒருவர் மனு அளித்தார்.
குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்தவர் சாதிக் உசேன் (41). இவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். ஆட்சியர் மனுக்களை பெறும் லூயி பிரெய்லி கூட்ட அரங்கிற்கு முன்பாக ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி இருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்சியரிடம் தன்னிடமிருந்த மனுவை அளித்து கூறியது:
நான் சென்னையில் காய்கனிக் கடையில் வேலைசெய்து வந்தேன். மதுரையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் ஒரு கையை இழந்ததுடன், படுத்த படுக்கையாக உள்ளேன்.
முன்பு குமரி மாவட்ட ஆட்சியராக நாகராஜன் இருந்தபோது எனக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை கிடைத்தது. சுமார் 6 மாதம் மட்டுமே அந்த உதவித்தொகையும் கிடைத்தது. அதன்பிறகு கிடைக்கவில்லை. எனது தாயுடன் வசித்துவரும் எனக்கு வேறு ஆதரவு இல்லை. எனவே எனக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்றார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார்.