இந்திய கடலோரக் காவல் படையில் சேருவதற்கு மீனவ இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ஏடிஜிபி சைலேந்திரபாபு.
திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி முகாம், நாகர்கோவில் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இம்முகாமை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:
இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் இதில் சேர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் வந்துள்ளனர். கடல் படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அடுத்தக் கட்டப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த முகாம் வெற்றி பெற்றால், தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.