கொல்லங்கோடு அருகே பழுது நீக்க மின்மாற்றியில் ஏறிய மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
வெங்குளம்கரை பகுதியைச் சேர்ந்தவர் யோனான் மகன் கனகராஜ் (41). இவர் கொல்லங்கோடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை காலையில் இவர் கொல்லங்கோடு அருகே கரிமரம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்குவதற்காக ஏறினாராம். அப்போது அவர் தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, பாறசாலை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய கொல்லங்கோடு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.