குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவு 10 மணிக்குமேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கோரி, அனைத்து கலைஞர்கள் நல இயக்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்கத் தலைவர் பி.கே. சிந்துகுமார், செயலர் கோட்டையிடி கோபாலன், ஒருங்கிணைப்பாளர் கொடுங்குளம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் வந்த கலைஞர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நாடக நடிகர், நடிகைகள், இன்னிசை பாடகர்கள் மற்றும் இவர்களைச் சேர்ந்த பல நூறு பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கோயில்கள் மற்றும் விழாக்களில் தங்களது பங்களிப்பினை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு நல்லிணக்கம், கல்வி மேம்பாடு, குடும்ப ஒற்றுமை ஆகிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மை கிடைத்து வந்தது.
இரவு 10 மணிக்கு மேல் நாடகங்கள், இன்னிசை கச்சேரிகள் நடத்தக்கூடாது என உத்தரவு வந்ததன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேடை கலைஞர்கள், இன்னிசை பாடகர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.