மலேசியா நாட்டில் பணியாற்றுவதற்காகச் சென்று சித்திரவதைக்கு ஆளாகி தவித்த பொறியியல் பட்டதாரிகள், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் முயற்சியால் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இதுகுறித்து, மத்திய இணை அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை அடுத்த நெல்லியரைகோணம் பிஜோ, ஜாஸ்பர் புஷ், கல்குறிச்சி வாழவிளை தருண்ஜோஸ், தக்கலை புலியூர் குறிச்சி தானேஷ், நெய்யூர் வடக்கு ஆழ்வார்கோயில் டய்ற்றஸ், நாகர்கோவில் சகோதரர் தெரு தினேஷ், மேக்கோடு வலியவிளை அஜீவ்ஜட்சன் உள்ளிட்ட 30 பேர் இரணியலை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மூலம் வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 30ஆம் தேதி மலேசியா சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள். இவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல், சித்திரவதை செய்யப்படுவதை அறிந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தையும், புதுதில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து, உடனடியாக 30 பேரையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்து, அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜூன் 19) தங்களது சொந்த ஊர் வந்து சேர்ந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.