குமரி மாவட்டத்திலிருந்து காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குழித்துறை பகுதியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் சந்திரசேகர், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் சென்னித்தோட்டம் பகுதியில் புதன்கிழமை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று குழித்துறை அருகே கல்லுக்கட்டி பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர். கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்ததில், காரில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 1 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படவிருந்ததும் தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.