நாகர்கோவிலிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு தினசரி இரவுநேர ரயில் இயக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் ஸ்ரீராம் ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்ட மக்கள் பல்வேறு பணிகளுக்காக சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இம்மாவட்ட மக்கள் ரயில் பயணத்தையே அதிகளவில் நம்பி உள்ளனர்.
எனவே, வருகின்ற ரயில் கால அட்டவணையில் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தினசரி புதிய அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும்.
இதன் மூலம் குமரி மாவட்ட மக்கள் மட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்ட பயணிகளும் சென்னைக்கு செல்ல பயன்படும்படியாக இருக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.