நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 11ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஓய்வூதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் காதுகளில் பூ வைத்து தங்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் குட்டப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பால்ராஜ், செயலர் சுந்தர்ராஜ், பொருளாளர் செல்வராஜாசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.