புலியூர்குறிச்சி சாலைவிபத்தில் உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்துக்கும் அரசின் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், அ.விஜயகுமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சியில் கடந்த 24ஆம் தேதி வேனும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்த மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அ. விஜயகுமார் எம்.பி. ஆகியோர் விபத்தில் இறந்த மாணவிகள் மஞ்சு, சிவரஞ்சனி, தீபா, சங்கீதா ஆகியோர் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
மேலும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அப்போது, தமிழ்நாடு மாநில முதன்மை மீன்வளக் கூட்டுறவுத் தலைவர் சேவியர் மனோகரன், கோட்டாட்சியர்கள் ராஜேந்திரன் (பத்மநாபபுரம்), ராஜ்குமார் (நாகர்கோவில்), ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், கல்குளம் வட்டாட்சியர் புவனேஸ்வரி, கனகராஜன், சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.