கிள்ளியூர் பேரூராட்சியில் உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கிள்ளியூர் பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு தாமிரவருணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட கிணறுகளிலிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக விளாத்துறை, காப்புக்காடு, கணபதியான்கடவு, மங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கிணறுகளிலிந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தாமிரவருணி ஆறும், கடலும் சங்கமிக்கும் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியிலிருந்து கடல் நீர் உள்புகுந்துள்ளதால் சுமார் 8 கி.மீ. தொலைவு வரை உப்பு நீராக உள்ளது. இதனால் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளிலும் ஊற்று நீர் உப்பாக உள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தோல் வியாதிகள் மற்றும் தொற்றுகள் ஏற்பட்டு மிகவும் அவதியடைந்துள்ளனர். கிள்ளியூர் பேரூராட்சியின் 18 ஆவது வார்டு பகுதியான கல்பொற்றவிளை, புல்லாணி, ஆர்.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீரை பயன்படுத்திய சிறுவர்களுக்கு கை, கால்களில் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தாமிரவருணி ஆறு பகுதிகளான கணபதியான் கடவு, மங்காடு பகுதிகளில் உடனே தடுப்பணை அமைத்து நிரந்தரமாக சுத்தமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.