நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணியை சுரேஷ்ராஜன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் இருந்து கட்டபொம்மன் சந்திப்பு வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் ஒழுகினசேரி முதல் முத்து திரையரங்கம் வரையிலான சாலையை முழுமையாக சீரமைக்கவும், அங்கிருந்து கட்டபொம்மன் சந்திப்பு வரை தாற்காலிகமாக சீரமைக்கம் முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இப்பணிகளை சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பல சாலைகள் திமுகவின் போராட்டத்துக்கு பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விரைவில் கல்கோவிலில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலை ரூ. 20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும். இதே போல் பீச் ரோடு சாலையும் மோசமான நிலையில் உள்ளது இந்தச் சாலையும் விரைந்து சீரமைக்கப்படும் என்றார் அவர்.