பிஎஸ்என்எல் நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் சார்பில் மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாம் குழித்துறையில் புதன்கிழமை (நவ.15) நடைபெறுகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல் மக்கள் தொடர்பு அலுவலர் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தரைவழி இணைப்பில் கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களுக்கு , விதிகளுக்கு உள்பட்டு உரிய தள்ளுபடி பெற்றுக்கொண்டு, பாக்கி தொகையை தீர்வு செய்வதற்கும் , தேவையானால் மறு இணைப்பு பெற்று கொள்ளவும் " லோக் அதாலத்' நிகழ்ச்சி குழித்துறை நீதி மன்றத்தில் புதன்கிழமை (நவ.15) காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது.
அருமனை, செறுவலூர், கடையல், களியக்காவிளை, கொல்லங்கோடு, குலசேகரம், குழித்துறை, மார்த்தாண்டம், மூவாற்றுக்கோணம், பைங்குளம், தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.