அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பமூடு பூங்கா சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நாகர்கோவில் வட்டாரச் செயலர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி தொடக்கவுரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெங்காயம், சமையல் எரிவாயு, சீனி, தேங்காய்,உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஐவின், சிஐடியூ மாவட்ட நிர்வாகி பொன்.சோபனராஜ் ஆகியோர் உரையாற்றினர். வட்டாரக் குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் கலா, கவிதா, அஸீஸ், எபநேசர், பரமசிவம், மூட்டா நிர்வாகி மனோகர் ஜஸ்டஸ், மோகன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.