கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை தரையில் கொட்டி அழித்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் வெள்ளிக்கிழமை (நவ.17) தொடங்கி ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்வர். இதையொட்டி முக்கடல் சங்கமம், கடற்கரைச் சாலை கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன், அகஸ்தீசுவரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் ரகு, ராஜாக்கமங்கலம் வட்டார அலுவலர் சிதம்பர தாணுபிள்ளை, கிள்ளியூர் வட்டார அலுவலர் ரஞ்சித் சிங் ஆகியோர் சோதனை நடத்தினர்.
சோதனையில் சர்பத் பாட்டில்கள், தரமற்ற எண்ணெயில் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்ததுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.