தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
தக்கலை தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் வந்ததையடுத்து, பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் வியாழக்கிழமை காலையில் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவமனை முதன்மையர் ராஜையனை சந்தித்து, மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராதது குறித்து விளக்கம் கேட்டார்.
பின்னர்அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை காக்கவில்லையென்றால் தீர்வு காணும் வரை மக்களுடன் இணைந்து மருத்துவமனையில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.