கன்னியாகுமரி மாவட்ட மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ 2.லட்சத்து 6 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
முளகுமூடு அருகே கோழிப்போர் விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலராக முருகன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இங்கு நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சாலமன்துரை, ரமா, சுதா ஆகியோர் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்திலுள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. மேலும் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மாலை 6.30 மணி வரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சத்து 6 ஆயிரத்தை லஞ்சஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். மேலும், 5 இடைத்தரகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.