தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை, தமிழ்மொழியின் சிறப்பினை வடநாட்டினர் அறிந்து கொள்வது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லிக்கு வாகனப் பிரசார பயணம் கன்னியாகுமரியிலிருந்து வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, காந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவர் தியாகி கோ.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். தென்குமரி தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தமிழறிஞர் அய்யப்பன் வரவேற்றார்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் வ.மு.சேதுராமன் தலைமையில் செல்லும் இந்தப் பயணத்தை, குமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்கப் பொறுப்பாளர் மனக்காவல பெருமாள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் குமரி மாவட்ட வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மைய பொதுச் செயலர் டாக்டர் பத்மநாபன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பயணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக இம்மாதம் 22 ஆம் தேதி தில்லிக்கு சென்றடைகிறது.