குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் மற்றும் 10 சதவீதம் கருணைத்தொகை கோரி, வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக பதிவு அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர் வல்சகுமார், தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலர் விஜயன், தலைவர் சிவநேசன், ஜனதாதள தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஞானதாஸ், பி.எம்.எஸ். தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. துணைப் பொதுச்செயலர் நடராஜன், தி.மு.க. ஜோசப்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் குமரி கிழக்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியது: போனஸ் வழங்கக் கோரி மருதம்பாறை முதல் கீரிப்பாறைவரை உள்ள ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் வழங்கியிருக்கிறார்கள்.
அந்த போனஸை பெற இந்த ஆண்டு போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 டிவிஷன்களை சேர்ந்த 2, 500 நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1,500 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காகவும் இந்தப் போராட்டம் நடக்கிறது. காமராஜரால் துவங்கப்பட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் பேசியது: அரசு புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தமிழகத்தில் எந்தத் தொழிலும் சிறப்பாக நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பல போராட்டங்களை நடத்தி 20 சதவீதம் போனஸ் பெற்றோம்.
இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரித்தது போன்று கூலித்தொழிலாளிக்கு மாதம் ரூ.18 ஆயிரத்து 500 சம்பளம் வழங்க வேண்டும். பண்டிகை கால அட்வான்ஸ் தொகையை ரூ.10 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க அரசு முயற்சிக்கிறது. எனவே, தொழிலாளர்களின் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்றார் அவர்.
போனஸ் அறிவிக்கும்வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.