அருமனை அருகே அரசுப் பேருந்துகளை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறை பிடித்தனர்.
மார்த்தாண்டத்திலிருந்து அருமனை அருகேயுள்ள காரோடு வழி பனச்சமூட்டிற்கு 3 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் ஆறு மாதங்களுக்கு முன் தடம் எண் 86 ஜெ பேருந்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தடம் எண். 386 சி பேருந்தும் நிறுத்தப்பட்டது. இத் தடத்தில் இயங்கி வந்த இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இத் தடத்தில் இயக்கப்படும் பேருந்தான தடம் எண் 86சி பேருந்து வெள்ளிக்கிழமை காலையில் காரோடு சந்திப்பில் வந்தபோது மாணவ, மாணவியர் அப்பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருமனை போலீஸார் அப்பகுதிக்கு வந்து பேச்சு நடத்தினர். தொடர்ந்து மார்த்தாண்டம் போக்குவரத்து பணிமனை அதிகாரியும் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளையும் மீண்டும் இத் தடத்தில் இயக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப் போராட்டத்தால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.