குமரி ஆவின் ஊழியர்களுக்கு, வெள்ளிக்கிழமை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
குமரி ஆவின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி பால்பண்ணை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பொதுமேலாளர் தியானேஷ்பாபு முன்னிலை வகித்தார். ஒரு ஊழியருக்கு ரூ.16 ஆயிரத்து 800 வீதம், மொத்தம் ரூ. 8 லட்சத்து 54 ஆயிரத்து 382 போனசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் பேசியது: தமிழகத்தில் அதிக லாபம் ஈட்டும் 4 ஆவின் யூனியன்களில் ஒன்றாக குமரி ஆவின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய ஆவின்களும் இடம்பெற்றுள்ளன. குமரி ஆவின் இந்த ஆண்டு ரூ. 5 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னை, சேலம் ஆவின்களிலிருந்து இனிப்பு வகைகள், 500 ரூபாய் கிப்ட் பாக்ஸ் என 8 வகையான இனிப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தற்போது குமரி ஆவினில் பாதாம் பவுடர், பால்கோவா, தயிர், மோர் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி முடிந்ததும் நெய், குல்பி, சாக்லேட், கேக் ஆகியவை குமரி ஆவினில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆவின் மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்நடைபெற்ற சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கும் விழாவிற்கு அதன் தலைவர் பத்மாவதி நாக பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சொர்ணபாய் வரவேற்றார்.
ஆரல்வாய்மொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பரமசிவம் , சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர் 188 பேருக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் காசோலை மூலம் போனஸ் வழங்கப்பட்டது. சங்கத்திற்கு அதிக அளவில் பால் கொண்டு வந்த உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சங்க பணியாளர்கள் இருவருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. எழுத்தர் அரசகுமார் நன்றி கூறினார்.