திருவட்டாறு அருகே காரில் கடத்திச் சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜாண்பிரைட் ஆகியோர் திருவட்டாறு, ஆற்றூர் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்லுப்பாலம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டாராம். இதையடுத்து காரை சோதனையிட்ட போது, அதில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.