தமிழகத்தில் டெங்கு மரணம் அதிகரித்துள்ள நிலையில் மாநில அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். விழா கொண்டாடுவதில் அக்கறை காட்டி வருகிறார்கள் என மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அதன் மாநிலத் தலைவர் எச். வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியது; ஜி.எஸ்.டி. குறித்து ஆழமாகவும், தெள்ளத் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது மெர்சல் திரைப்படம். ஜனநாயக நாட்டில் நடிகர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவரும் திட்டம் குறித்து யாரும் எதுவும் சொல்லக்கூடாது என பாஜக நினைக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட இருக்கிறார். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 2019 இல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்கும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணம் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்பதை அமைச்சர்கள் பார்க்காமல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் சில்வெஸ்டர், இ. சந்தோஷ், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஜார்ஜ், சூழால் ஊராட்சி முன்னாள் தலைவர் இவான்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.