பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நவ. 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்க நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் கே.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகைமாவட்டம் பொறையாறு பணிமனை இடிந்துவிழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் கடும் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளால் ஏழை மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கான 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 9,10, 11 ஆகிய நாள்களில் புதுதில்லி நாடாளுமன்றம் முன்பாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதில் குமரி மாவட்டத்திலிருந்து பங்கேற்பவர்களை வழியனுப்பியும், கோரிக்கைகளை விளக்கியும், நவ. 2 ஆம் தேதி மாவட்ட ஆடசியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகனன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் ஞானதாஸ், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் முத்துகருப்பன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் அனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்டதுணைச் செயலர்கள் எஸ்.அந்தோணி, கே.பி.பெருமாள், மாவட்டதுணை தலைவர் சந்திரபோஸ், மாநிலச் செயலர் எம்.ஐடாஹெலன், எல்பிஎப் நிர்வாகி விஜயன், எச்எம்எஸ் நிர்வாகிகள் எம். லட்சுமணன், ஈஸ்வரபிரசாத், ஐஎன்டியூசி செயலர் முருகேசன், ஏஐசிசிடியூ நிர்வாகி எல். செல்வமுருகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.