வெள்ளிமலை பாலமுருகன் கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாததால் குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று வெள்ளிமலை பாலமுருகன் கோயில். மலைக்கு மேல் இருக்கும் இந்த கோயிலுக்கு தினமும் வழக்கமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவர். விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்படியேறி பாலமுருகனை வழிபடுவர்.
வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியதால் அதிகமான பக்தர்கள் வெள்ளிமலை முருகனை வழிபட்டு செல்கின்றனர். ஆனால் மலையேறி வரும் பக்தர்கள் தாகத்தை போக்க சுகாதாரமான குடிநீர் கோயில் வளாகத்தில் கிடைக்கவில்லை.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயில் வளாகத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் செயல்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் பக்தர்கள் குடிநீருக்கு திண்டாடும் நிலை உள்ளது. . எனவே குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை சீரமைத்து பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியது: மலை மேல் இருக்கும் கோயிலுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கோடை காரணமாக தண்ணீர் கிடைக்காமல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. கோயில் தேவைகளுக்கே லாரி தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது மழை பெய்து தண்ணீர் கிடைத்துவிட்டதால் மலை மீதிருக்கும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயந்திரம் சீரமைக்கப்பட்டபிறகு பக்தர்களுக்கு தாராளமாக குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.