குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்த நிலையில் ரப்பர் மரங்களில் ரப்பர் பால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் மழை பெய்யாத நிலையில் தென்னை, வாழை, ரப்பர், மரவள்ளி உள்ளிட்டப் பயிர்கள் அனைத்தும் காய்ந்து சாய்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை இந்தப் பயிர்களை காத்துள்ளது.
மழையில்லாத நிலையில் ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி கடுமையாகச் சரிந்திருந்தது. இந்நிலையில் அண்மை நாள்களாக பெய்து வரும் மழை மண்ணில் ஈரத்தை ஏற்படுத்தி ரப்பர் மரங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்துள்ளது.
ரப்பர் விலை கடந்த இருவாரங்களுக்கு மேலாக கிலோவிற்கு ரூ. 112 என்ற அளவில் இருந்த நிலையில் இந்த விலை கடந்த சில நாள்களாக சற்று உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை கோட்டயம் சந்தையில் ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 133 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 130 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோ ரூ, 117.50 ஆகவும் இருந்தது. ஒட்டுப்பால் விலை கிலோ ரூ. 89 ஆக இருந்தது.