களியக்காவிளை அருகே சாலையோரம் பாலித்தீன் பையில் கேட்பாரற்று கிடந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை மாலையில் களியக்காவிளை சந்திப்பு அருகில் கேரள எல்லையோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பூட்டியிருந்த ஒரு கடையின் முன் பாலித்தீன் கவரில் சுற்றப்பட்டு மர்ம பொருள் கிடந்தது தெரிந்தது. போலீஸார் பாலித்தீன் பையிலிருந்த பொருளை எடுத்து பார்த்தபோது அவை சணல் நூலால் சுற்றப்பட்டு, நாட்டு வெடி குண்டுகள் போன்று காணப்பட்டது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவற்றில் வெடி குண்டுகளுக்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் அவை பட்டாசுகள் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.