தூய்மையே சேவை என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி வரை சுகாதாரத்தை பேணும் விதத்தில் 'தூய்மையே சேவை' என்னும் இயக்கம் நடைபெற உள்ளது. இதன் ஒருகட்டமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ராகுல்நாத் முன்னிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மையே சேவை என்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ் மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, நகராட்சி, பேரூராட்சி போன்ற துறைகளை சார்ந்த அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'தூய்மை ரதம்'ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை(செப். 17) நடைபெறுகிறது. அலுவலக சுத்தம், பள்ளி சுத்தம், பொதுஇடங்கள் சுத்தப்படுத்துதல் குறித்த தொடர் விழிப்புணர்வு செயல்பாடுகள் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.