கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த சேகர் மனைவி அபிராமசுந்தரி (54). இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், கீழகுயில்குடி, சீனிவாச நகரைச் சேர்ந்த நீலகண்டனை (34) போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நீலகண்டனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து, 13 பவுன் நகைகளை மீட்டனர்.